கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்


கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:46 PM GMT)

கோலாரில், விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்பட்டு நாட்டுப்புற கலைஞரை அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகி உள்ளது. அவரது மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலார்:-

நாட்டுப்புற கலைஞர்

கோலார் (மாவட்டம்) தாலுகா கன்னகட்டே கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. நாட்டுப்புற கலைஞர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கிராமத்தையொட்டிய பகுதியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது.

இதனால் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதுபற்றி கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கள்ளக்காதல்

மேலும் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சவுமியாவும் இதையே போலீசாரிடம்

கூறி வந்தார். இருப்பினும் போலீசாருக்கு சவுமியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் அவரைப்பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது திருமணத்திற்கு பிறகு சவுமியாவுக்கும், சொக்கரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தனிமையில் சந்தித்து உல்லாசம்

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சவுமியாவின் கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்தது. அதையடுத்து அவர் தனது மனைவியையும், ஸ்ரீதரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் இருவரும் தங்களது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதனால் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அதையடுத்து அவர் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். பின்னர் அங்கிருந்து மீண்டும் கணவரிடம் வந்த சவுமியா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கிருஷ்ணமூர்த்தியை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார்.

கைது

இவர்களது கொலை திட்டத்துக்கு ஸ்ரீதரின் நண்பர் ஒருவர் உதவி செய்து இருக்கிறார். அதன்படி அவர்கள் சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி படுகொலை செய்து உடலை சாலையோரம் வீசி விபத்தில் சிக்கி இறந்ததுபோல் சித்தரித்து இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் சவுமியா, அவரது கள்ளக்காதலன் ஸ்ரீதர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஸ்ரீதரின் நண்பர் என 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story