அருணாச்சல பிரதேசத்தில் "துடிப்பான கிராமங்கள் திட்டம்" - அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்


அருணாச்சல பிரதேசத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டம் - அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்
x

'துடிப்பான கிராமங்கள் திட்டம்' (வி.வி.பி.) என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

சீன ராணுவம் கடந்த 1951-ம் ஆண்டில் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது முதல் இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை தொடங்கி நீடித்து வருகிறது. இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

இதற்கிடையில் அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு கடந்த 4-ந்தேதி சீன அரசு புதிய பெயர்களை சூட்டியுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதால் உண்மையை மாற்றிவிட முடியாது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' (வி.வி.பி.) என்ற புதிய திட்டத்தை மத்தியஉள்துறை மந்திரி அமித்ஷா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

இந்திட்டத்தின்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும் துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக 2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை ரூ.4800 கோடி செலவிடப்பட உள்ளது.


Next Story