காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது


காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
x

5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவசரமாக கூடுகிறது.

புதுடெல்லி,

5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவசரமாக கூடுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை அமைக்கப்பட்டு உரிய வழிகாட்டலின்படி காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் கையாளப்பட்டு வந்தாலும் கர்நாடக அரசின் செயல்பாடுகளால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு காவிரி விவகாரம் சென்றுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு ஆகிவற்றை கர்நாடக அரசு மதிக்காததையே இது காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 12-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு வேண்டுகோள் விடுத்தது. இதுதொடர்பான பரிந்துரைகளை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தது.

இதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களிடத்தில் மட்டுமல்ல, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிகளின் அவசர கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கர்நாடக அரசின் நிலைப்பாடு, கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் மூலம் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார்.

மேற்படி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த விசாரணையின்போது காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேட்கக்கூடும் என்பதால் அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூட இருக்கிறது.

இந்த அவசர கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இது காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிகிறது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட போராடுவார்கள். அதன்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story