ஆந்திரா: விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய போலீசார்!


ஆந்திரா: விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய போலீசார்!
x

ஆந்திர மாநிலத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் மக்களுடன் சேர்ந்து நடனமாடினர்.

திருப்பதி,

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வணங்கினர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், தாடி பத்ரி அடுத்த பேக்ஷன் கோடபள்ளியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று விஜர்ஜன ஊர்வலம் நடந்தது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அன்று 2 பிரிவுகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஆனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு பக்கீரப்பா தலைமையில் டி.எஸ்.பி ஸ்ரீசைதன்யா மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது வாலிபர்கள் விநாயகர் சிலைகளுக்கு முன்பாக நடனமாடியபடி சென்றனர். ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சூப்பிரண்டு பக்கீரப்பா வாலிபர்களுடன் சேர்ந்து திடீரென நடனம் ஆடினார். போலீஸ் சூப்பிரண்டு நடனம் ஆடுவதை சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் வைரலாகி வருகிறது.


Next Story