சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்


சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
x
தினத்தந்தி 2 May 2023 9:45 PM GMT (Updated: 2 May 2023 9:45 PM GMT)

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

ஆமதாபாத்,

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க 'ஆபரேஷன் காவேரி' என்ற மீட்பு திட்டத்தை கடந்த 24-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது.

சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள், பஸ்கள் மூலமாக போர்ட் சூடான் நகருக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகருக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஜெட்டாவில் இருந்து விமானப்படை விமானங்கள் அல்லது பயணிகள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இதுவரை சுமார் 2 ஆயிரத்து 500 இந்தியர்கள், நாடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்கள் தனிவிமானம் மூலம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில், குஜராத் மாநில உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி வரவேற்றார்.

231 பேரில் 208 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 13 பேர் பஞ்சாப்பையும், 10 பேர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள் ஆவர்.


Next Story