கேரளாவில் மற்றொரு சம்பவம்; சிகிச்சை அளித்த டாக்டரை தாக்கிய நோயாளி கைது


கேரளாவில் மற்றொரு சம்பவம்; சிகிச்சை அளித்த டாக்டரை தாக்கிய நோயாளி கைது
x

கேரளாவில் சிகிச்சை அளித்தபோது பெண் டாக்டர் தாக்கி, கொலை செய்யப்பட்டது போன்று மற்றொரு டாக்டர் மீது தாக்குதல் நடத்திய நோயாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் வட்டகுன்னு பகுதியை சேர்ந்த தோயல் வல்தின் என்ற நபர் விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அவர் சிகிச்சை அளித்த டாக்டர் இர்பான் கான் என்பவரை தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. நேற்று இரவு 10.50 மணியளவில் நடந்த இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, தோயலை கைது செய்து, ஜீப்பில் அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்றனர். இதுபற்றி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் இர்பான் கூறும்போது, நான் பணியில் இருந்தேன். நோயாளி குடிபோதையில் காணப்பட்டார்.

எந்தவித தூண்டுதலும் இல்லாத நிலையில், எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். நான் சிகிச்சை அளித்தபோது, அவர் என்னை அறைந்ததுடன், கொன்று விடுவேன் என மிரட்டினார். உடனே, எனது மேலதிகாரிகளிடம் இதுபற்றி புகார் அளித்தேன். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் தோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக வந்தனா தாஸ் (வயது 22) என்பவர் பணியாற்றினார். இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவருக்கு பெண் டாக்டர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார்.

இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலர் மீதும் அந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களை பாதுகாக்க முடியாவிட்டால், மருத்துவமனைகளை மூடுங்கள் என்று இந்த சம்பவத்திற்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்த வரும்படி, டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதுபற்றி வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் கண்டனமும் வெளியிட்டது.

இதேபோன்று, பணியிடங்களில் சுகாதார நலம் சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்தது.


Next Story