பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 March 2024 7:37 PM GMT (Updated: 12 March 2024 12:30 AM GMT)

பஞ்சாப் மாநிலத்தை வண்ணமயமாக்க 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இதையொட்டி அங்குள்ள மொகாலியில் தேர்தல் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். இதை எங்களின் பதவிக்காக கேட்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தை வண்ணமயமாக்கவும், வளமாக்கவும், 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவேண்டும்.

பஞ்சாப் மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.8 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அதே நேரம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. மாநிலத்துக்கான நிதியை நிறுத்தி வைத்து, முதல்-மந்திரி பகவந்த் மானை மத்திய அரசும், பஞ்சாப் கவர்னரும் தினமும் துன்புறுத்துகிறார்கள்.

பஞ்சாப்பில் ஒரு காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இருந்தது. மின் மின்வெட்டு இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர்.

ஆனால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. பல்வேறு தொழில் அதிபர்கள், இங்கு தொழில் தொடங்க முன்வருகிறார்கள். இதன் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.


Next Story