காஷ்மீர் பண்டிட்கள் கொலை: 'ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்' - கேரள கவர்னர்


காஷ்மீர் பண்டிட்கள் கொலை: ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன் - கேரள கவர்னர்
x

கோப்புப்படம் 

காஷ்மீர் பண்டிட்கள் கொலை சம்பவம் தொடர்பாக ஒரு இந்தியனாக தான் வெட்கப்படுவதக கேரள கவர்னர் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் அங்கு புலந்த்ஷாஹர் மாவட்டம் பங்கர் கிராமத்தில் அம்பேத்கரின் சிலையை நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காஷ்மீரில் பண்டிட்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து பேசிய ஆரிப் முகமது கான், "ஒரு அப்பாவி மனிதரை கொலை செய்வதை விட பெரிய குற்றம் எதுவும் இருக்க முடியாது. ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன். என் நாட்டை சேர்ந்த ஒருவன் தன் வீட்டை விட்டு வெளியேறி அகதியாக நேர்ந்தால், எவ்வளவு வெட்கப்பட்டாலும் போதாது" என கூறினார்.

தொடர்ந்து, பண்டிட்கள் கொலை குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறியது குறித்த கேள்விக்கு, "எனது பதவியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு எந்த அரசியல் விஷயத்திலும் கருத்து தெரிவிக்க மாட்டேன்" என ஆரிப் முகமது கான் பதிலளித்தார்.

சனிக்கிழமையன்று காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா "இது நிற்கப்போவதில்லை, நீதி கிடைக்கும் வரை இது தொடரும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story