அலுமினிய சரக்கு ரெயில் பெட்டிகள் ரெயில்வேயில் சேர்ப்பு: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்


அலுமினிய சரக்கு ரெயில் பெட்டிகள் ரெயில்வேயில் சேர்ப்பு: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
x

Image Courtacy: PTI

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அலுமினிய சரக்கு ரெயில் பெட்டிகள் ரெயில்வேயில் சேர்க்கப்பட்டன.

புதுடெல்லி,

நிலக்கரி போன்ற சரக்குகளை கொண்டு செல்வதற்காக அலுமினியத்தில் ரெயில் பெட்டிகள் (ரேக்) தயாரிக்கப்பட்டு உள்ளன. பெஸ்கோ லிமிடெட் மற்றும் ஹிண்டால்கோ நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் பெட்டிகள் ரெயில்வேயில் நேற்று இணைக்கப்பட்டன.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்டீல் பெட்டிகளை விட இவை 180 டன் வரை எடை குறைவானவை ஆகும். இதனால் ரெயில்களின் வேகம் அதிகரிப்பதுடன், மின்தேவையும் குறையும்.

முதல் முறையாக இந்த பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயிலை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் 2021-22-ம் ஆண்டில் ரெயில் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணமாக பெறப்பட்ட தொகையில் 45 சதவீதம், சிறப்பு ரெயில்கள் மூலம் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுர் என்பவர் அனுப்பிய கடிதத்துக்கு ரெயில்வே அளித்த பதிலில் இது கூறப்பட்டு உள்ளது. அந்தவகையில் 2021-22-ம் ஆண்டில் சிறப்பு ரெயில்கள் மூலம் பயணிகள் டிக்கெட் கட்டணமாக ரூ.17,526.48 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.15,248.49 கோடியாக இருந்தது.

அதேநேரம் கொரோனாவுக்கு முந்தைய 2019-20-ம் ஆண்டில் இது ரூ.804.78 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story