75 நகரங்களை வலம் வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: அசாம் மாநிலம் திப்ருகரை சென்றடைந்தது!


75 நகரங்களை வலம் வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: அசாம் மாநிலம் திப்ருகரை சென்றடைந்தது!
x

மகாபலிபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.

கவுகாத்தி,

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டும் வரும் புகழ்மிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் நடைபெற உள்ளது இதுவே முதன்முறை. இம்முறை 189 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் ஜோதி ஓட்டம் ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஜோதி 40 நாட்களில் நாட்டில் உள்ள 75 நகரங்களுக்கு பயணம் செய்து, இறுதியாக, போட்டி நடைபெறும் மகாபலிபுரத்தை வந்தடையும்.

இந்த நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகரை செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றடைந்தது. அசாமின் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி பிமல் போரா, கிராண்ட்மாஸ்டர் மித்ரபா குஹாவிடமிருந்து ஜோதியை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி கடந்த செவ்வாய்க்கிழமை, மிசோரம் மாநிலம் ஐஸ்வாலுக்கு பயணித்தது. லே, ஸ்ரீநகர், தர்மஷாலா, சிம்லா, சண்டிகர், அமிர்தசரஸ், குருகிராம், டேராடூன், ஹரித்வார், கான்பூர், அகமதாபாத், தண்டி, ஜெய்ப்பூர், டாமன், மும்பை, புனே, நாக்பூர், பனாஜி, போபால், இந்தூர், குவாலியர், ஜான்சி, கோஹிமா, காங்டாக், ஷில்லாங், கவுகாத்தி மற்றும் சிலிகுரி போன்ற நகரங்களைத் தழுவி இன்றுவரை வரிசையாக பல்வேறு நகரங்கள் வழியாக பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story