அசாம் முதல் மந்திரி பங்கேற்ற விழாவில் மைக்கை பிடுங்கிய நபரால் பரபரப்பு


அசாம் முதல் மந்திரி பங்கேற்ற விழாவில் மைக்கை பிடுங்கிய நபரால் பரபரப்பு
x

மேடையில் திடீரென ஏறிய ஒரு நபர்,அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல் மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஐதராபாத்

பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் மோடியை தீவிரமாக எதிர்த்து வரும் கே.சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றார். ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பொதுக் கூட்ட மேடையில் அவர் பாஜக நிர்வாகிகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த மேடையில் திடீரென ஏறிய ஒரு நபர்,அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல் மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அந்த நபரை பாஜக நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல் மந்திரி கேசிஆர் பாஜக இல்லாத அரசியல் பற்றி பேசுகிறார், ஆனால் நாங்கள் வாரிசு இல்லாத அரசியல் பற்றி பேசுகிறோம். ஐதராபாத்தில் கேசிஆர் மகன் மற்றும் மகளின் படங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம்.

நாடு வாரிசு அரசியலில் இருந்து விடுபட வேண்டும். ஒரு அரசு, நாட்டுக்காக, மக்களுக்காக இருக்க வேண்டும், ஆனால் ஒரு குடும்பத்திற்காக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அசாம் முதலமைச்சருக்கு நிகழ்ந்த அவமரியாதை மாநில அரசின் முழு தோல்வியை காட்டுவதாகவும், இந்த சம்பவத்திற்காக தெலுங்கானா முதல் மந்திரி கேசிஆர், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அசாம் சட்டசபை துணை சபாநாயகர் நுமல் மோமின் வலியுறுத்தி உள்ளார்.

மேடையில் அசாம் முதல் மந்திரி மர்மநபர் வாக்குவாதம் செய்தது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story