ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து மோசடி; வாலிபர் கைது


ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:45 PM GMT)

ஹரிஹரா டவுனில், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 32 போலி ஏ.டி.எம். கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிக்கமகளூரு;

முதியவர்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியவில்லை. இந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து முதியவர் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரவில்லை என கூறி முதியவரிடம், தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம். கார்டை ெகாடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதனை வாங்கி கொண்டு முதியவர் அங்கிருந்த புறப்பட்டு சென்றாா்.

கண்காணிப்பு கேமராவில்...

இதையடுத்து அந்த வாலிபர் முதியவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அதில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அப்ேபாது அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்் உடனடியாக இதுகுறித்து ஹரிஹரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்-ல் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கைது

அதில் உதவி செய்வதாக கூறிய வாலிபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் துமகூரு மாவட்டம் சிரா தாலுகாவை சேர்ந்த அருண்குமார்(வயது 35) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இதுபோல் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

அவர் மீது ஹரிஹரா போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், பசவநகர் மற்றும் பரங்கி போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 32 ஏ.டி.எம். காா்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story