பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி


பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி
x

பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு:

3 வயது குழந்தை

பெங்களூரு பன்னரகட்டா அருகே கல்கெரே கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த குழந்தையை தாய் அருகே உள்ள கடைக்கு அனுப்பி இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் கடையின் அருகே காருடன் நின்ற சிலர், குழந்தையை பிடித்து காருக்குள் ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். உடனடியாக வாலிபர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் தங்களை விரட்டி வருவதை பார்த்ததும் கல்கெரே பகுதியில் உள்ள வனப்பகுதி அருகே குழந்தையுடன் காரை நிறுத்திவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

வலைவீச்சு

பின்னர் காருக்குள் இருந்த குழந்தையை வாலிபர்கள் மீட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காரையும், காருக்குள் இருந்த ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.

குழந்தையை கடத்த முயன்ற மர்மநபர்கள் யார்? பணத்திற்காக குழந்தையை கடத்த முயற்சி நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை கடத்த முயன்ற மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story