மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி


மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:45 PM GMT)

கோலார் தங்கவயலில் ஒருதலை காதலால் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கயவல்

ஒருதலை காதல்

கோலார் தங்கவயலை அடுத்த உரிகம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-வது ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்தவர் பிரீத்தம் பிரபு. மாணவன் பிரீத்தம் பிரபு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

இது மாணவிக்கு பிடிக்கவில்லை. பிரீத்தம் பிரபுவை எச்சரித்து வந்தார். ஆனால் அந்த மாணவன் கேட்கவில்லை. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த பிரீத்தம் பிரபு, அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் தனது கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால், மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவி உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மாணவன் கைது

இந்த சம்பவத்தை பார்த்த சக மாணவர்கள், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு ராபர்ட்சன்ேபட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உரிகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக பிரீத்தம் பிரபுவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story