'பாபா சாஹேப் அம்பேத்கர் யாத்திரை' - இந்திய ரெயில்வேயின் புதிய சுற்றுலா தொகுப்பு அறிமுகம்


பாபா சாஹேப் அம்பேத்கர் யாத்திரை - இந்திய ரெயில்வேயின் புதிய சுற்றுலா தொகுப்பு அறிமுகம்
x

டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களைப் பார்க்கும் வகையில் சுற்றுலா தொகுப்பு வடிமைக்கப்படுகிறது.

புதுடெல்லி,

'நமது தேசத்தைப் பாருங்கள்' (தேக்கோ அப்னா தேஷ்) என்ற முன்னெடுப்பின் மூலம், இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் 'பாபா சாஹேப் அம்பேத்கர் யாத்திரை' என்ற சுற்றுலா தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா தொகுப்பு டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களைப் பார்க்கும் வகையில் வடிமைக்கப்படுகிறது. இந்த அம்பேத்கர் யாத்திரை சுற்றுலா தொகுப்பின் முதல் பயணம் தலைநகர் டெல்லியில் இருந்து வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

7 இரவுகள் மற்றும் 8 பகல்களைக் கொண்ட இந்த சுற்றுலாவின் முதல் பயணம் டெல்லியில் தொடங்கி, மத்திய பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் பிறந்த இடமான டாக்டர் அம்பேத்கர் நகருக்கு (மாவ்) செல்கிறது. அங்கிருந்து நாக்பூரில் தீக்ஷா பூமிக்கு செல்லும் வகையில் சுற்றுலா தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாஞ்சி, கயா, சாரநாத், ராஜ்கிர், நாலந்தா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றுவிட்டு மீண்டும் டெல்லி திரும்பும் வகையில் இந்த பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகள் டெல்லி, மதுரா, ஆக்ரா கண்டோன்மெண்ட் ஆகிய ரெயில் நிலையங்களில் பயணத்தைத் துவங்கி நிறைவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story