பக்ரீத் பண்டிகை; ரூ.1 கோடி கொடுக்க முன்வந்தும் செம்மறியாட்டை தர மறுத்த நபர்...!! ஏன்..?


பக்ரீத் பண்டிகை; ரூ.1 கோடி கொடுக்க முன்வந்தும் செம்மறியாட்டை தர மறுத்த நபர்...!! ஏன்..?
x
தினத்தந்தி 28 Jun 2023 12:21 PM GMT (Updated: 28 Jun 2023 1:09 PM GMT)

ராஜஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடி கொடுக்க முன்வந்தும் செம்மறியாட்டை அதன் உரிமையாளர் தர மறுத்து உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் தாரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜூ சிங். இவரிடம் செம்மறியாடு ஒன்று உள்ளது. அதன் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்படுகிறது என கூறப்படுகிறது.

இந்த செம்மறியாட்டுக்கு ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்க பலரும் முன்வந்து உள்ளனர். ஆடு ஒன்றுக்கு இந்த அளவுக்கு பணம் கொடுக்க தயாராக இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விசயம் அருகேயுள்ள கிராமங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், செம்மறியாட்டை விற்க அதன் உரிமையாளரான ராஜூ சிங் முன்வரவில்லை. அவர் கூறும்போது, செம்மறியாட்டின் உடலில் என்ன வாசகம் இடம் பெற்று உள்ளது என தனக்கு தெரியாது. எனினும், முஸ்லிம் சமூக உறுப்பினர்கள் சிலரிடம் இதுபற்றி ஆலோசித்தேன்.

அதன்பின் ஆட்டின் உடலில் கவனித்தபோது, 786 என்ற எண்கள் காணப்பட்டன என கூறியுள்ளார். இந்த 786 என்ற எண்கள் இஸ்லாம் மதத்தில் புனிதம் வாய்ந்தவை என கருதப்படுகிறது.

அவர் தொடர்ந்து கூறும்போது, ஒரு பெண் செம்மறியாடு கடந்த ஆண்டு ஆண் செம்மறியாடு ஒன்றை ஈன்றது. மக்கள் இன்று அதற்கு அதிக விலை கொடுக்க முன்வந்து உள்ளனர். ரூ.70 லட்சம் வரை கூட கொடுக்க அவர்கள் முன்வந்தனர். ஆனால், அதனை விற்க நான் தயாராக இல்லை.

ஏனெனில், அது தன்னுடன் அன்பாக உள்ளது என ராஜூ கூறுகிறார். இவ்வளவு பெரிய தொகைக்கு கேட்ட பின்னர் அந்த செம்மறியாட்டுக்கு சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது.

ஆட்டுக்கு மாதுளை, பப்பாயா, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் என தினசரி கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அந்த ஆட்டை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து வருகிறார்.


Next Story