கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் வீடியோ-படம் எடுக்க தடை - கடும் எதிர்ப்புக்குப் பிறகு நீக்கம்


கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் வீடியோ-படம் எடுக்க தடை - கடும் எதிர்ப்புக்குப் பிறகு நீக்கம்
x

பொதுமக்கள் புகைப்படம், வீடியோ எடுக்க பிறப்பிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவை கர்நாடக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் தங்களது செல்போனில் அலுவலகம் மற்றும் அதிகாரிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதித்து நேற்று முன்தினம் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தில் அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிப்பதால், அரசுக்கு தான் தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றும், அந்த உத்தரவை ரத்து செய்யும்படியும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, சாதாரண அரசு அலுவலகங்களில் இருந்து விதானசவுதா வரையிலான அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி நேரத்தின் போது அரசின் சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் புகைப்படம், வீடியோ எடுக்க பிறப்பிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவை கர்நாடக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.


Next Story