"காலனித்துவ மனப்பான்மை"பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் மத்திய அரசு கண்டனம்


காலனித்துவ மனப்பான்மைபிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் மத்திய அரசு கண்டனம்
x
தினத்தந்தி 19 Jan 2023 11:29 AM GMT (Updated: 19 Jan 2023 12:36 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி எடுத்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலான பதற்றங்களின் ஒரு பார்வை. 2002 கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் அவரது பங்கு பற்றிய கூற்றுக்களை விசாரணை" என்று அந்த ஆவணப்படம் கூறுகிறது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், லண்டன் வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா (2001 - 2006), பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், கலவரத்தின்போது முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதற்காக அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி எடுத்த ஆவணபடதிற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-

இந்த ஆவணப்படம் அதை உருவாக்கிய ஏஜென்சியின் எண்ண ஓட்டமாகும். இது ஒரு பிரச்சாரப் பகுதி, அதில் பாரபட்சம் மற்றும் காலனித்துவ மனப்பான்மை உள்ளது. அத்தகைய திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி உள்ளார்.

இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், யூடியூபிலிருந்து இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு விரைந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Next Story