கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் காரை ஏற்றி வாலிபர் படுகொலை


கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் காரை ஏற்றி வாலிபர் படுகொலை
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:45 PM GMT)

சிகாரிப்புராவில் கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் காரை ஏற்றி வாலிபரை படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா

கள்ளத்தொடர்பு

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிக்கமாகடி லம்பானி தாண்டா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாயக் (வயது26). தொழிலாளி. அதேப்பகுதியை சேர்ந்தவர் சந்திரா நாயக் (28), இவரது மைத்துனர் சங்கரா நாயக். இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர்.

இந்தநிலையில் மஞ்சுநாயக்கிற்கும், அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து, சந்திரா நாயக் மற்றும் சங்கரா நாயக்கிற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கள்ளத்தொடர்பை கைவிடும்படி மஞ்சுநாயக்கிடம் கூறி உள்ளனர். ஆனால், அதை எல்லாம் மஞ்சுநாயக் கேட்காமல் அந்த பெண்ணிடம் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் மீண்டும் மஞ்சுநாயக்கியிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி சந்திரா நாயக், சங்கரா நாயக் ஆகியோர் கூறினர்.

சாமி தரிசனம்

இந்தநிலையில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள சந்திரா நாயக், சங்கரா நாயக்கை மஞ்சுநாயக் கொலை செய்ய திட்டமிட்டார். இந்தநிலையில், சங்கரா நாயக், சந்திர நாயக் ஆகிய 2 பேரும் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள ஹனகெரே கட்டு கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 8 மணியளவில் சிகாரிப்புராவிற்கு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 2 பேரில் சந்திரா நாயக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காரை ஏற்றி...

இதுகுறித்து தகவல் அறிந்த சிராளகொப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சந்திரா நாயக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிகாரிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதால் மஞ்சுநாயக் தனது உறவினர்களான சந்திரா நாயக், சங்கரா நாயக் ஆகியோரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். அதில் சந்திரா நாயக் மீது மஞ்சுநாயக் காரை ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கைது

இதுகுறித்து சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாயக்கை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சிகாரிப்புரா பகுதியில் பதுங்கி இருந்த மஞ்சுநாயக்கை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிராளகொப்பா போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story