40 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய பெஜாவர் மடாதிபதி...!


40 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய பெஜாவர் மடாதிபதி...!
x
தினத்தந்தி 18 Jun 2023 8:15 PM GMT (Updated: 19 Jun 2023 7:16 AM GMT)

உடுப்பியில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து பரிதவித்த பூனையை, பெஜாவர் மடாதிபதி கிணற்றுக்குள் இறங்கி காப்பாற்றினார்.

உடுப்பி:

பெஜாவர் மடாதிபதி

உடுப்பியில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உட்பட்டது பெஜாவர் மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி. கர்நாடகத்தின் புகழ்பெற்ற மடங்களில் பெஜாவர் மடமும் ஒன்று. இந்த நிலையில் பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி நேற்று உடுப்பி அருகே முச்சலகோடு கோவிலுக்கு சென்றார்.

அப்போது கோவிலை சுற்றி வந்த அவர், அங்குள்ள கோவில் கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த கிணற்றுக்குள் பூனை ஒன்று பரிதவித்து கொண்டிருந்தது. அதாவது 40 அடி ஆழ கிணற்றில் பூனை தவறி விழுந்திருந்தது.

பூனையை காப்பாற்றினார்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெஜாவர் மடாதிபதி, சற்றும் யோசிக்காமல், யார் உதவியையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்த ஒரு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்க தொடங்கினார். பின்னர் அவர், 40 அடி ஆழ கிணற்றுக்குள் முழுமையாக இறங்கி பரிதவித்த பூனையை பத்திரமாக மீட்டு ேமலே கொண்டு வந்தார். பின்னர் அந்த பூனைக்கு உணவு கொடுத்து அந்தப்பகுதியில் விட்டார்.

மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story