மனைவியை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை


மனைவியை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை
x

மேற்கு வங்காளத்தில் மனைவியை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகஞ்ச்,

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள மஜ்தியா குத்திபாரா பகுதியில் வசிக்கும் நபர் ஜயந்தா சர்தார் (வயது 29). அவரது மனைவி திபாலி (வயது 25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவருடன் அடிக்கடி ஏற்பட்டு வந்த சண்டையின் காரணமாக திபாலி கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று இரவு ஜயந்தா, திபாலியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று, அவரை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்டுள்ளார். இதையடுத்து அவருடன் திபாலி சேர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அவர்கள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

ஜயந்தாவின் உடல் மஜ்தியா ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்திற்கு அருகிலும், திபாலியின் உடல் அவர்களது வீட்டின் பின்புறம் கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுபட்ட நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஜயந்தா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, மனைவியைக் கொன்றுவிட்டதாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story