ராகுல்காந்திக்கும், எனக்கும் மோதலா..? பா.ஜனதா கருத்துக்கு பிரியங்கா விளக்கம்


ராகுல்காந்திக்கும், எனக்கும் மோதலா..? பா.ஜனதா கருத்துக்கு பிரியங்கா விளக்கம்
x

கோப்புப்படம்

ராகுல்காந்திக்கும், பிரியங்காவுக்கும் இடையே அரசியல்ரீதியாக மோதல் நடந்து வருவதாக பா.ஜனதா கூறியதற்கு பிரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மாளவியா, நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கும், அவருடைய சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவுக்கும் இடையே அரசியல்ரீதியாக மோதல் நடந்து வருவதாக அதில் அவர் கூறியிருந்தார். அதுபற்றி விளக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அதற்கு பிரியங்கா பதில் அளித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவினரே...பணவீக்கமும், வேலையின்மையும் நிலவும் நேரத்தில் உங்களுக்கு இதுதான் பிரச்சினையா?

மன்னிக்கவும், உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. என் சகோதரரும், நானும் நல்ல பாசத்துடன் இருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் அன்பு, நம்பிக்கை, மரியாதை, விசுவாசம் வைத்துள்ளோம்.

பொய்யை முறியடிப்போம்

கவலைப்பட வேண்டாம். நாட்டின் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து அண்ணன்-தங்கையான நாங்கள், உங்களின் பொய்கள், கொள்ளைகள், வெற்று பிரசாரம் ஆகியவற்றை நொறுக்குவோம்.

அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். சகோதர, சகோதரிக்கு இடையிலான பாசத்திருவிழாவான இதை ஆக்கப்பூர்வமான உணர்வுடன் கொண்டாடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோல், பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, தனது கையில் பிரியங்கா 'ராக்கி' கயிறு கட்டி விட்டதாக கூறினார்.


Next Story