ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டியது; மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு


ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டியது; மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு
x

தமிழகத்தில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை 38-வது நாளில் பல்லாரிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை 1,000 கி.மீ. மைல் கல்லை எட்டியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.

ராகுல்காந்தி பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் கன்னியாகுமாரியில் தொடங்கினார். பின்னர் அவர் கேரளாவில் பாதயாத்திரையை முடித்து, கர்நாடகாவில் தொடர்ந்து யாத்திரையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ராகுல்காந்தி தனது 38-வது நாள் பாதயாத்திரையை பல்லாரி மாவட்டம் ஹலகுந்தியில் உள்ள ஹலகுந்தி மடத்தில் இருந்து காலை 6.30 மணியளவில் தொடங்கினார். காலை 9.30 மணியளவில் பல்லாரி கோர்ட்டு அருகே கம்மா பவனுக்கு ராகுல்காந்தியின் பாதயாத்திரை வந்தடைந்தது. சுமார் 8.8 கிலோ மீட்டருக்கு ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் பல்லாரி கோர்ட்டுக்கு வந்தடைந்த போது, 1,000 கி.மீட்டர் மைல்கல்லை எட்டியது. மொத்தம் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த பாதயாத்திரை நேற்று 1,000 கி.மீ. தூரத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி பல்லாரியில் நேற்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஸ் பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு

அதே நேரத்தில் பல்லாரி மாவட்டம் ஹலகுந்தியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்று இருந்தார்கள். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே முதல் முறையாக ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்று இருந்தார்.

இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

ராகுல்காந்தியை வரவேற்கும் விதமாக சாலைகளில் ஆங்காங்கே விதவிதமான பிரமாண்ட கோலங்கள் போடப்பட்டு இருந்தது. ஹலகுந்தியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை ராய்ச்சூர் பழைய பஸ் நிலையம் வந்த போது, 20 நிமிடம் ராகுல்காந்தி ஓய்வெடுத்தார். ராகுல்காந்திக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திங்கட்கிழமை பாதயாத்திரை கிடையாது

திங்கட்கிழமை அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பாதயாத்திரை நடைபெறாது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story