பீகார்: 55 கூலித் தொழிலாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! கங்கை ஆற்றில் மூழ்கிய 10 பேரை தேடும் பணி தீவிரம்


பீகார்: 55 கூலித் தொழிலாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! கங்கை ஆற்றில் மூழ்கிய 10 பேரை தேடும் பணி தீவிரம்
x

ஒரு படகு கவிழ்ந்ததில் 55 பயணிகள் ஆற்றில் மூழ்கினர்.

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னா அருகே மனேர் கிராமத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானது. டானாபூர் அருகே கங்கை ஆற்றில் 55 பயணிகளுடன் சென்ற படகு மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 45 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 10 பயணிகளை காணவில்லை என அஞ்சப்படுகிறது. காணாமல் போன பயணிகளை மீட்புப்படை தேடி வருகிறது.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, தாவூத்பூரில் வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக நேற்று கங்கை ஆற்றின் மறுகரைக்கு சென்று, நாள் முழுவதும் தீவனம் சேகரித்துவிட்டு இன்று காலை அவர்கள் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூன்று படகுகளில் பயணித்தனர்.

இதனிடையே ஆற்றின் பலத்த நீரோட்டம் காரணமாக இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு படகு கவிழ்ந்ததில் 55 பயணிகள் ஆற்றில் மூழ்கினர்.படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் டானாபூர் ஷாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அறிந்ததும் அங்கு பெரும் கூட்டம் அலைமோதியது.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் இருந்த 45 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் 10 பயணிகளை காணவில்லை, அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story