இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த பீகார் அமைச்சர்


இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த பீகார் அமைச்சர்
x

Image Courtacy: ANI

இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே பீகார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாட்னா,

பீகாரில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியின் ஆதரவுடன் நிதிஷ் குமார் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்தார்.

அண்மையில் நிதிஷ் குமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மேலவை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நிதிஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கம் நடந்த அன்று, 2014ம் ஆண்டில் நடந்த கடத்தல் வழக்கில் கார்த்திகேய சிங் டானாபூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் ஆனால் அவர் அன்று நீதிமன்றத்துக்கு சென்று சரண் அடையாமல் பாட்னாவில் அமைச்சராக பதவியேற்றார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும், கார்த்திகேய சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நிதிஷ் குமாரை பா.ஜ.க. வலியுறுத்தியது.

கார்த்திக்கேய சிங் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார், எனக்கு தெரியாது. இதைப்பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த சர்ச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்-மந்திரி நிதிஷ் குமாரையும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவையும் வலியுறுத்தியது.

இந்த சூழலில், கைது வாரண்டை எதிர்கொண்டுள்ள காத்திக்கேய சிங்கின் இலாகா மாற்றப்பட்டது. கார்த்திக்கேய சிங்குக்கு கரும்பு தொழில்துறை ஒதுக்கப்பட்டது. அவரிடம் இருந்த சட்ட துறை முதலில் கரும்பு தொழில் துறை அமைச்சகத்தை கவனித்த வந்த ஷமீம் அகமதுவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் பீகார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது பதவியை கார்த்திகேய சிங் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story