நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை - சமாஜ்வாடி கட்சி தலைவர்


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை - சமாஜ்வாடி கட்சி தலைவர்
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பா.ஜ.க. பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டுதான் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க. இப்போதே வரிந்து கட்டுகிறது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அது எந்தளவுக்கு பலனைத்தரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

விசாரணை வளையத்தில் எதிர்க்கட்சியினர்

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்கோபால் யாதவ், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வளையத்தின் கீழ் பா.ஜ.க. கொண்டு வந்து விடும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்போர், எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளினால், அவர்களைப் பயமுறுத்தினால், அவர்களை நிர்ப்பந்தத்தின்கீழ் கொண்டு வந்து விடலாம் என கருதுகிறார்கள்.

இந்திரா காந்தியின் செயல்

இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளினார். ஆனால் அதன்பின்னர் வந்த இடைத்தேர்தல்கள், பொதுத்தேர்தல் எல்லாவற்றிலும் அவரது கட்சி தோல்வியைத்தான் தழுவியது.

உத்தரபிரதேசத்தில் யாருடைய தலைமையின்கீழ் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அவரது வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறினார்.


Next Story