டெல்லியில் பா.ஜ.க. சார்பில் இன்று தேசிய செயற்குழு கூட்டம், பேரணி; போக்குவரத்து மாற்றம்


டெல்லியில் பா.ஜ.க. சார்பில் இன்று தேசிய செயற்குழு கூட்டம், பேரணி; போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 16 Jan 2023 5:02 AM GMT (Updated: 16 Jan 2023 5:08 AM GMT)

டெல்லியில் நாளை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பிரதமர் மோடி தலைமையிலான பேரணி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நாளை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பிரதமர் மோடி தலைமையிலான பேரணி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாள் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் இன்று தொடங்க இருக்கிறது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் கட்சி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பேரணி நாளை நடைபெற இருந்த நிலையில், இன்றைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதன்படி, இன்று மதியம் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரை பேரணி நடைபெறும். இதனையொட்டி, டெல்லியின் சில பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட கூடும். இதனால், வாகனங்கள் செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற பின்பு டெல்லியில் நடைபெறும் அக்கட்சியின் முதல் மிக பெரிய கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு, குஜராத்தில் பிரதமர் மோடி 5 மணிநேரம் கொண்ட 50 கி.மீ. தொலைவை கடந்து செல்லும் மெகா பேரணியை நடத்தினார்.

டெல்லியில் பேரணியை முன்னிட்டு போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் பா.ஜ.க. பேரணியை முன்னிட்டு சன்சாத் மார்க் பகுதியில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்ற நிலையில், பட்டேல் சவுக் முதல் சன்சாத் மார்க்-ஜெய் சிங் சாலை பகுதி வரை இன்று பிற்பகல் 3 மணியளவில் பேரணி நடைபெறும்.

பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இதனை தொடர்ந்து, அசோகா சாலை, சன்சாத் மார்க், டால்ஸ்டாய் சாலை, ரபி மார்க், ஜந்தர் மந்தர் சாலை, இம்தியாஸ் கான் மார்க் மற்றும் பங்க்ளா சாஹிப் லேன் பகுதியில் இன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த பகுதிகளில் சாலைகள் மூடப்படுகின்றன.

வாகன போக்குவரத்து ஆனது, கோல் தக் கானா, குருத்வாரா ரகப் கஞ்ச், வின்ட்சார், ரெயில் பவன், அவுட்டர் சி.சி.-சன்சாத் மார்க் சந்திப்பு, ரெய்சினா சாலை-ஜந்தர் மந்தர் சாலை சந்திப்பு, ஜன்பாத்-டால்ஸ்டாய் சாலை சந்திப்பு மற்றும் டால்ஸ்டாய் சாலை கே.ஜி. மார்க் சந்திப்பு பகுதிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் வர இருக்கிற சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.

இந்த தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, பா.ஜ.க. தலைமையகத்தில் கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநில அமைப்பு தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்கள் அடங்கிய கூட்டம் நடைபெறும்.





Next Story