2024 நாடாளுமன்ற தேர்தலில் நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும்: மத்திய மந்திரி அமித்ஷா


2024 நாடாளுமன்ற தேர்தலில் நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும்:  மத்திய மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 17 Jan 2023 10:54 AM GMT (Updated: 17 Jan 2023 11:05 AM GMT)

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,



நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன் கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களை சந்திக்க, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கி விட்டது.

இந்த நிலையில், தேர்தல் யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

இதனையொட்டி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரையில் மெகா பேரணியும் நடந்தது. இதில், திரண்டிருந்த தொண்டர்கள், மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின், பிரதமர் மோடி குத்து விளக்கேற்றி தேசிய செயற்குழு கூட்ட நிகழ்வை தொடங்கி வைத்துள்ளார். இதில் 35 மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் 12 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், 37 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதம் முடிய உள்ளது.

இந்த கூட்டத்தில் அவரது பதவிக்காலம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து முடியும் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தில் முதலில் பேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல்களை கட்சி எதிர்கொள்கிறது. இவற்றில் ஒரு மாநில தேர்தலில் கூட வெற்றியை இழந்து விட கூடாது என அவர் குறிப்பிட்டார்.

இன்று நடந்து வரும், 2-வது நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் வருகிற 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிவித்து உள்ளார். இதனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து முடியும் வரை அவர், கட்சி தலைவர் பதவியில் நீடித்திடுவார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி முதல் முறைப்படி அக்கட்சியின் தேசிய தலைவராக நட்டா பதவி வகித்து வருகிறார். இன்னும் 3 நாட்களில் அவரது பதவி காலம் முடிவடைய உள்ள சூழலில், தலைவருக்கான பதவி நீட்டிப்பு அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷா கூறும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும். மீண்டும் பிரதமராக மோடி நாட்டை வழிநடத்தி செல்வார் என கூறியுள்ளார்.


Next Story