பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த உடுப்பி வாலிபர் கைது


பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த  உடுப்பி வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:45 PM GMT)

ஹிஜாப்பிற்கு எதிராக பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ.விற்கு கொலை மிரட்டல் விடுத்த உடுப்பி வாலிபர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு-

ஹிஜாப்பிற்கு எதிராக பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ.விற்கு கொலை மிரட்டல் விடுத்த உடுப்பி வாலிபர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

எம்.எல்.ஏ.விற்கு கொலை மிரட்டல்

கர்நாடகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் மத அடையாள ஆடைகளை அணிந்து வரகூடாது என்று மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கலவரம் நடந்தது. அப்போது பா.ஜனதா பிரமுகரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சேர்ந்த யஷ்பால் சுவர்ணா மற்றும் பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த பிரமோத் முத்தாலிக் ஆகியோர் பள்ளி, கல்லூரிக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்களுக்கு எதிராக மாணவிகள் போர்கொடி உயர்த்தினர். மேலும் சிலர் இவர்களை கொலை செய்துவிடுவதாக சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தனர். இந்த கொலை மிரட்டல் குறித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் காபு போலீசில் யஷ்பால் சுவர்ணா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

தலைமறைவானவர் கைது

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காபு போலீசார், அப்போது பஜ்பேயை அடுத்த கெஞ்சாரு பகுதியை சேர்ந்த முகமது ஷபி (வயது 26) என்பவரை கைது செய்தனர். மற்றொரு நபரான பஜ்பேயை சேர்ந்த முகமது ஆசிப் (32) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை காபு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில் முகமது ஆசிப், மும்பை விமான நிலையத்திற்கு வருவதாக காபு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காபு போலீசார் முகமது ஆசிப்பை கைது செய்தனர். பின்னர் அவரை உடுப்பி அழைத்து வந்த போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆசிப்பை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீசார் ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஹிஜாப்பிற்கு எதிராக பேசியதால் மிரட்டல் விடுத்ததாக ஆசிப் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story