ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!


ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
x

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

ஜிஎஸ்டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவை தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. ஜிஎஸ்டி என அழைக்கப்படும் இந்த வரி வருவாயை மாநில அரசுகளும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த கவுன்சிலே பொருட்களுக்கான வரியை கூட்டுவது, குறைப்பது, நீக்குவது உள்ளிட்ட முடிவுகளை எடுத்து வருகிறது.

இந்த கவுன்சிலில் மத்திய நிதிமந்திரி மற்றும் பல மாநிலங்களில் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகளை மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story