கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வு?


கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வு?
x

கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயருகிறதா? என்பது குறித்து போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பதிலளித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயருகிறதா? என்பது குறித்து போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துைற மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பஸ்கள் கொள்முதல்

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து 9-வது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

பிற மாநிலங்கள் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது குறித்து நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். கர்நாடகத்தில் 9 லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடிய பஸ்கள் நிறுத்தப்படும். அதனால் புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் எடுத்து கூறியுள்ளோம். இதற்கு அவர் ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

டிரைவர்கள் நியமனம்

கனிமவள நிதியை கொண்டு கல்யாண-கர்நாடக பகுதிக்கு புதிதாக 600 பஸ்களை வாங்க முடிவு செய்துள்ளோம். வருகிற 2030-ம் ஆண்டுக்குள் படிப்படியாக டீசல் பஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு மின்சார பஸ்கள் இயக்கப்படும். புதிதாக 2,000 பஸ் டிரைவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் வெளி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆயினும் ஊழியர்களுக்கு காலம் தவறாமல் சம்பளம் வழங்கி வருகிறோம். போக்குவரத்து கழகங்களின் மேம்பாட்டிற்கு அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் மக்களுக்கு சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.


Next Story