பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம் - அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் குறித்து ஆலோசனை


பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம் - அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் குறித்து ஆலோசனை
x

Image Courtesy : ANI

அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து மந்திரிசபை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி தூதரக வளாகத்தில் அமைந்துள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இந்த மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

அரசாங்கத்தின் நிர்வாகம், கொள்கை விவகாரங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அவ்வபோது மந்திரிசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று நடைபெற்ற இந்த மந்திரிசபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மக்களவை தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் 21-ந்தேதி, அடுத்த 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு மந்திரிசபை உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் 'விக்சித் பாரத் 2047' தொலைநோக்கு திட்டம் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து மந்திரிசபை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மக்களவை தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கம் உருவான பிறகு, அடுத்த 100 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்தும் மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story