3 ஆண்டுகள் கழித்து துபாயில் இருந்து வந்து தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வாலிபர்


3 ஆண்டுகள் கழித்து துபாயில் இருந்து வந்து தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வாலிபர்
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:46 PM GMT)

3 ஆண்டுகள் கழித்து துபாயில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் மீன் விற்கும் தனது தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மங்களூரு-

3 ஆண்டுகள் கழித்து துபாயில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் மீன் விற்கும் தனது தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

துபாயில் வேலை

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கங்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா. இவரது மகன் ரோகித். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் சென்றார். சுமித்ரா கங்கொல்லி மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், 3 ஆண்டுகள் கழித்து ரோகித் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார்.

ஆனால் தான் ஊருக்கு வருவது குறித்து தாய் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானம் மூலம் ரோகித் மங்களூருவுக்கு வந்தார்.

இன்ப அதிர்ச்சி

பின்னர் அவர் வீட்டுக்கு செல்லாமல், நேராக தாய் சுமித்ரா மீன் வியாபாரம் செய்யும் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவர் தனது முகம் தெரியாதபடி கைக்குட்டையால் கட்டி, வாடிக்கையாளர் போல தாயிடம் சென்று மீன் விலையை கேட்டுள்ளார்.

சுமித்ராவும் முதலில் யார் என தெரியாமல் மீன் விலையை தெரிவித்துள்ளார். பின்னர் ரோகித், மீன் விலையை குறைக்கும்படி தாய் சுமித்ராவுடன் பேரம் பேசி உள்ளார். ஒரு கட்டத்தில் ரோகித்தின் குரலையும், அவரது நடவடிக்கைகளையும் கவனித்து தனது மகன் தான் என சுமித்ரா அறிந்து கொண்டார். பின்னர் அவர் அணிந்திருந்த தொப்பி, கைக்குட்டையை விலக்கி பார்த்தபோது, தனது மகன் ரோகித் நிற்பதை கண்டு சுமித்ரா இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

3 ஆண்டுகள் கழித்து தனது மகனை பார்த்து சுமித்ரா ஆனந்த கண்ணீர் விட்டார்.

சமூக வலைதளங்களில் வைரல்

பின்னர் ஆனந்த கண்ணீருடன் தனது மகன் ரோகித்தை சுமித்ரா கட்டித்தழுவினார். ரோகித்தும் தனது தாயை கட்டி தழுவினார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்-மகன் பாசம் குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பலர் பதிவிட்டனர்.


Next Story