நாகாலாந்து, மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு: நாளை ஒரேகட்ட தேர்தல்


நாகாலாந்து, மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு: நாளை ஒரேகட்ட தேர்தல்
x

கோப்புப்படம்

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தநிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு நாளை (27-ந் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த விறுவிறுப்பான ஓட்டுப்பதிவில் 81.10 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகலாந்து, மேகாலயாவில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. நாளை (27-ஆம் தேதி) ஒரேகட்டமாக வாக்கப்பதிவு நடைபெற உள்ளது.

மேகாலயாவை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிட்டுள்ளனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 12 மாவட்டங்களில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாகாலாந்து, மேகாலாயவில் மொத்தமுள்ள 120 பதவிகளுக்கு 558 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மார்ச் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியாகிறது.


Next Story