கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது..!


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது..!
x

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் தலைவர்கள் இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நிறைவு பெற்றதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்கள்.

குறிப்பாக ஆளும் பா.ஜனதாவினர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதுபோல் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. 6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவு பெறுவதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


Next Story