தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதிய கார்; மெஸ்காம் என்ஜினீயர் பரிதாப சாவு


தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதிய கார்; மெஸ்காம் என்ஜினீயர் பரிதாப சாவு
x

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மெஸ்காம் என்ஜினீயர் பலியானார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா;

அரசு என்ஜினீயர்

சிவமொக்கா டவுனில் உள்ள மங்களூரு மின்சார வாரியத்தில்(மெஸ்காம்) என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் அசோக்(வயது 60). இவருக்கு கமலம்மா என்ற மனைவியும், விஜயகுமார், கங்காதர் என 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அவர் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அசோக்கின் மகளுக்கு நேற்று குழந்தை பிறந்தது. இதையடுத்து அதிகாரி அசோக் தனது மனைவி கமலம்மா, மகன்கள் விஜயகுமார் மற்றும் கங்காதர் ஆகியோருடன் காரில் சிவமொக்காவில் உள்ள தனது மகள் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு பேத்தியை பார்த்துவிட்டு அங்கிருந்து மீண்டும் அசோக் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். காரை அவரது மகன் விஜயகுமார் ஓட்டியதாக கூறப்படுகிறது.

பலி

இவர்கள் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா ஹரோகொப்பா பி.கேம்ப் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஜயகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய அசோக் சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார். காரில் பயணித்த அவரது மனைவி, மகன்கள் ஆகிய 3 பேர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிகாரிப்புரா போலீசார், அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன மெஸ்காம் என்ஜினீயரான அசோக் இன்னும் ஒரு வாரத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story