சிசோடியா கைதுக்கு எதிராகவே சி.பி.ஐ. அதிகாரிகள் பலர் இருந்தனர்; அரசியல் நெருக்கடி என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


சிசோடியா கைதுக்கு எதிராகவே சி.பி.ஐ. அதிகாரிகள் பலர் இருந்தனர்; அரசியல் நெருக்கடி என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x

சிசோடியா கைதுக்கு எதிராகவே சி.பி.ஐ. அதிகாரிகள் பலர் இருந்தனர் என்றும் அவர்கள் அரசியல் நெருக்கடிக்கு கீழ்படிந்து உள்ளனர் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என கெஜ்ரிவால் சாடினார். இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகளை முன்னிட்டு நேரில் ஆஜராக கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கேட்டிருந்தார்.

இதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிசோடியாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது.

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிஷ் சிசோடியா நேற்று காலை தனது இல்லத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார். திறந்த நிலையிலான காரில் நின்றபடி சென்ற அவரை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதுபற்றி சிசோடியா தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், சி.பி.ஐ.யிடம் மீண்டும் செல்கிறேன். விசாரணை முழுவதும் நான் முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்பேன்.

லட்சக்கணக்கான குழந்தைகளின் அன்பு மற்றும் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு உள்ளன. சில மாதங்கள் வரை தன்னை சிறையில் வைத்தாலும் அதற்காக கவலைப்பட போவதில்லை என பதிவிட்டார்.

பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக சிறைக்கு செல்வது என்பது எனக்கு ஒரு சிறிய விசயம். நாட்டுக்காக தனது வாழ்வையே இழந்த பகத் சிங்கின் வழியில் வந்தவன் நான் என அவர் கூறினார். இதன்பின்னர் டெல்லி ராஜ்காட்டில் அமர்ந்தபடி சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

இதேபோன்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், கடவுள் உங்களுடன் இருக்கிறார் மணிஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரின் ஆசீர்வாதங்கள் உங்களுடன் உள்ளன. நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது என்பது ஒரு சாபம் அல்ல. அது பெருமைக்கு உரிய ஒரு விசயம்.

நீங்கள் சிறையில் இருந்து விரைவில் திரும்ப வேண்டும் என கடவுளிடன் நான் வேண்டி கொள்கிறேன். டெல்லியின் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் நாங்கள் எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறோம் என டுவிட்டரில் பதிவிட்டார். உங்கள் குடும்பத்தினரை நாங்கள் பார்த்து கொள்வோம். கவலைப்பட வேண்டாம் சிசோடியா அவர்களே என்றும் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணிநேரம் நேற்று நடந்த விசாரணைக்கு பின்னர் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இதுபற்றி கெஜ்ரிவால் இன்று கூறும்போது, சி.பி.ஐ. அதிகாரிகளில் பலர் மணிஷ் சிசோடியாவின் கைதுக்கு எதிராகவே இருந்தனர் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது அதிகாரிகள் அனைவரும் பெரிய மரியாதை வைத்துள்ளனர்.

சிசோடியாவுக்கு எதிராக சான்றுகளும் இல்லை. ஆனால், அவரை கைது செய்ய அரசியல் நெருக்கடி அதிக அளவில் இருந்தது. அதனால், தங்களது அரசியல் மேலிடத்திற்கு கீழ்படிந்து நடந்து உள்ளனர் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், சிசோடியா கைது பற்றி சி.பி.ஐ. தரப்பில் வெளியான அறிக்கையில், மதுபான ஊழல் வழக்கு விசாரணையின்போது, சிசோடியா தப்பிக்க கூடிய வகையிலான பதில்களை வழங்கினார். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. சான்றுகளுடன் அவரை எதிர்கொண்டபோதும் முரணாகவே பதில்களை அளித்து உள்ளார். அதனால், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்து இருந்தது.



Next Story