ஆபாச படம் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக 20 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை


ஆபாச படம் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக 20 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 24 Sep 2022 7:50 AM GMT (Updated: 24 Sep 2022 7:57 AM GMT)

சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் குறித்து 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி:

இணையவெளியில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பகிர்வோர், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பை சேர்ந்த சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில் 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று 20 மாநிலங்களில் 56 இடங்களில் இந்த அதிரடி சோதனையை நாடு தழுவிய அளவில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் மேக்சக்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கூண்டோடு பிடிக்க 200 க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதே குற்றம் தொடர்பாக 2021 நவம்பரில் நடத்தப்பட்ட சோதனைகளின் தொடர்ச்சியாகவே தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது அதற்கு 'ஆபரேஷன் கார்பன்' என்று பெயரிடப்பட்டது.

தற்போது சோதனை நடைபெற்று வரும் நிலையில் சோதனை குறித்து முழுவிபரங்களும் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story