புதிய நாடாளுமன்றத்தை இணைத்து துணை ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை: மத்திய அரசு டெண்டர் வெளியீடு


புதிய நாடாளுமன்றத்தை இணைத்து துணை ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை: மத்திய அரசு டெண்டர் வெளியீடு
x

கோப்புப்படம்

டெல்லியில் துணை ஜனாதிபதி மாளிகையை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைத்து சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பொது தலைமை செயலகம், புதிய பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், புதிய துணை ஜனாதிபதி மாளிகை (வீடு மற்றும் அலுவலகம்) ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதிதாக கட்டப்படும் ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அந்தவகையில் துணை ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

அதாவது பிரதமர் இல்லத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் இடையே எதிர்காலத்தில் அமைய உள்ள சுரங்கப்பாதை வழியாக மேற்படி சுரங்கப்பாதை செல்லும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் மூலம் முக்கிய பிரமுகர்களின் பயணங்களால் அடிக்கடி போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துணை ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான பணிகள் தொடங்கிய 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கான டெண்டரை மத்திய பொதுப்பணித்துறை நேற்று வெளியிட்டது. டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும்.

இந்த சுரங்கப்பாதை 185 மீட்டர் நீளமும், 6.20 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story