சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம்..!


சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம்..!
x
தினத்தந்தி 20 Aug 2023 9:27 AM GMT (Updated: 20 Aug 2023 9:57 AM GMT)

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சென்னை,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. பின்னர் கடந்த 18-ந்தேதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை இன்று அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது. தற்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., அதிகபட்சம் 134 கி.மீ. என்ற தொலைவில் லேண்டர் பயணித்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story