தொடா் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


தொடா் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

கே.ஆர்.நகர் தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மைசூரு:

கே.ஆர்.நகர் தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா ஒசூர்காவல் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்தையொட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் 2 சிறுத்தை குட்டிகள் கிடந்தன. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கே.ஆர்.நகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் 2 சிறுத்தை குட்டிகளையும் மீட்டனர். மேலும் அந்தப்பகுதியில் தாய் சிறுத்தையின் நடமாட்டம் இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்தனர்.

கூண்டில் சிக்கியது

இதையடுத்து வனத்துறையினர், அந்த சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இரும்பு கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் வனத்துறையினர், சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story