செஸ் ஒலிம்பியாட்: ஜோதி ஓட்டத்தை ஜூன் 19-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்


செஸ் ஒலிம்பியாட்: ஜோதி ஓட்டத்தை ஜூன் 19-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை ஜூன் 19-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடக்கிறது.

இதற்கிடையே போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும்.

இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இந்த முறை நேரமின்மை காரணமாக சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி சுடர் ஓட்டத்தை வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த சுடர் ஓட்டம் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தடையும் என கூறப்படுகிறது.


Next Story