சத்தீஷ்கார்: நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப். வீரர் காயம்


சத்தீஷ்கார்:  நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப். வீரர் காயம்
x

சி.ஆர்.பி.எப். வீரர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.

ராய்ப்பூர்,

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில், 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள் ஆவர்.

இதற்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது. அதேநேரம் பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலை புறக்கணிக்கும்படி நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏறக்குறைய 60 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் தொண்டமர்கா பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.


Next Story