அசாமில் குழந்தை திருமணங்கள்; 2,170 பேர் அதிரடியாக கைது


அசாமில் குழந்தை திருமணங்கள்; 2,170 பேர் அதிரடியாக கைது
x

அசாமில் குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.



கவுகாத்தி,


நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த ஜனவரி 23-ந்தேதி முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.

இந்நிலையில், அசாமில் முதல்-மந்திரியின் உத்தரவை தொடர்ந்து, குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் இன்று காலை வரையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர் என சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரசந்த குமார் கூறியுள்ளார்.

குழந்தை திருமணங்கள் தொடர்பாக இதுவரை 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், கைது எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் திருமண சடங்குகளை நடத்திய சாமியார்கள் மற்றும் காஜிக்கள் ஆவர் என டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார். அவர்களில் பலர் தூப்ரி, பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் விஸ்வநாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story