ராகுல்காந்திக்கு எதிராக பேச்சு: பியூஸ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி.


ராகுல்காந்திக்கு எதிராக பேச்சு: பியூஸ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி.
x

கோப்புப்படம்

ராகுல்காந்திக்கு எதிராக பேசியதாக பியூஸ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசை காங்கிரஸ் எம்.பி. வழங்கினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் ஆற்றிய உரை தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த 2 நாட்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல், ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். அவைக்கு வந்து மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோகில் நேற்று உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கரிடம் அவர் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

அதில் அவர், மற்றொரு அவையின் (மக்களவை) உறுப்பினரை பியூஸ் கோயல் தரக்குறைவாக விமர்சித்ததாகவும், அவர் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்றொரு அவையின் உறுப்பினர் குறித்து மாநிலங்களவையில் யாரும் பேசக்கூடாது என்று அவைத்தலைவரால் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருப்பதையும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.


Next Story