ஏன்..ஏன்..ஏன்? மக்களவையில் பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் எம்.பி. முன்வைத்த 3 முக்கிய கேள்விகள்...?


ஏன்..ஏன்..ஏன்? மக்களவையில் பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் எம்.பி. முன்வைத்த 3 முக்கிய கேள்விகள்...?
x
தினத்தந்தி 8 Aug 2023 8:08 AM GMT (Updated: 8 Aug 2023 8:14 AM GMT)

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

புதுடெல்லி

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியுள்ளது. அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை தற்போது மீண்டும் கூடியது.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

1.மணிப்பூர் வன்முறை பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இதுவரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை..?

2. மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் 80 நாட்களுக்கு பிறகே பதில் அளித்தார்..? அந்த பதிலும் வெறுமனே 30 வினாடிகள் மட்டுமே இருந்தன.

3.மணிப்பூர் வன்முறை தொடர்பாக மாநில முதலமைச்சர் பைரன் சிங்கை பிரதமர் மோடி பதவியிலிருந்து நீக்காதது ஏன்..? இவ்வாறு அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.


Next Story