சர்ச்சை பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ. ஜார்ஜுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


சர்ச்சை பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ. ஜார்ஜுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
x

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பூஞ்சார் தொகுதி முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் (வயது 70). கடந்த ஏப்ரல் 29ந்தேதி அனந்தபுரி இந்து மகா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, முஸ்லிம்கள் நடத்தும் உணவு விடுதிகளில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் வகையிலான பொருட்கள் தூவிய தேநீர் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டை கைப்பற்றி கட்டுப்படுத்தும் முயற்சியாக இது நடைபெறுகிறது என கூறினார். பரபரப்பு ஏற்படுத்திய அவரது பேச்சால் கேரளாவில் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய வகையிலான அவரது பேச்சால் திருவனந்தபுரம் நகரின் கோட்டை காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து 153ஏ பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் உள்பட) அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 8ந்தேதி எர்ணாகுளம் மாவட்டத்தின் வெண்ணலா பகுதியில், மகாதேவ கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மற்றொரு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஜார்ஜ் பேசியதற்காக போலீசார் கடந்த 10ந்தேதி வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அவருக்கு கேரள ஐகோர்ட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சில் ஜாமீன் பெற்ற ஜார்ஜ், ஜாமீன் நிபந்தனைகளை மீறி விட்டார் என மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். ஜார்ஜ் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஜார்ஜ் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை விசாரணைக்கு காவலில் எடுக்க போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். முதல்-மந்திரி பினராயி அழுத்தத்தின் பேரிலேயே, ஜார்ஜை சிறையில் அடைக்க போலீசார் அவசரம் காட்டுகின்றனர் என அவரது மகன் மற்றும் கேரள ஜனபக்சம் அமைப்பின் தலைவர் ஷோன் ஜார்ஜ் கூறியுள்ளார்.


Next Story