நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடையூறு இருக்கக்கூடாது - சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து


நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடையூறு இருக்கக்கூடாது - சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து
x

கோப்புப்படம்

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடையூறு இருக்கக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அசாமில் புதிய சட்டசபை கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், 'நாடாளுமன்ற கோவிலில் ஒவ்வொரு முக்கிய பிரச்சினை குறித்தும் விவாதங்கள், பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் இருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் எந்தவித இடையூறும், முட்டுக்கட்டையும் இருக்கக்கூடாது' என்று கூறினார்.

மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருந்து மக்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக கூறிய ஓம் பிர்லா, அதற்காகத்தான் ஏராளமான நம்பிக்கையுடன் உங்களை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மக்களவையில் மசோதாக்கள் உள்பட ஒவ்வொரு விஷயத்திலும் நடத்தப்படும் தீவிர விவாதமே மக்களின் நலனுக்காக சிறந்த முடிவைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

மணிப்பூர் பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் சபாநாயகரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


Next Story