இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது..!


இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது..!
x
தினத்தந்தி 13 Sep 2023 12:53 AM GMT (Updated: 13 Sep 2023 6:34 AM GMT)

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

புதுடெல்லி,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணி 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழுவின் கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு திட்டத்தை விரைவில் உருவாக்க திட்டமிடப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதா கூறியதாவது:- கூட்டத்தில் மக்களை சந்திப்பது, கூட்டணி தலைவர்களை ஒருங்கிணைத்து பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து திட்டமிடுவது மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வித்தியாசமாக இருக்கும் பிரசாரங்களை வீடு வீடாகச் சென்று மேற்கொள்வது போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறினார்.


Next Story