3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?


3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?
x

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இடைத்தேர்தல்

இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் லட்சத்தீவு எம்.பி. தொகுதி தேர்தல் ஒத்தி போடப்பட்டது.

லும்லா (அருணாசலபிரதேசம்), ராம்கார் (ஜார்கண்ட்), ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), சாகர் திகி (மேற்கு வங்காளம்), கஸ்பாபேத் மற்றும் சிஞ்ச்வாடு (மராட்டியம்) ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மராட்டியத்தில் பிளஸ்-2 தேர்வு காரணமாக கஸ்பாபேத் மற்றும் சிஞ்ச்வாடு (மராட்டியம்) ஆகிய 2 தொகுதிகளில் ஒரு நாள் முன்னதாக 26-ந் தேதியும், மற்ற 4 தொகுதிகளிலும் 27-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.

இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.

நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது. இங்கு என்.டி.பி.பி-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.


Next Story